Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸின் (என்சிபி) அஜித் பவார் மற்றும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் துணை முதல்வர்களாகவும் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜககூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.
இந்நிலையில், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் கூறும்போது, “மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளிலும் ஆய்வு நடத்தினோம். குறிப்பாக யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம்.
கடந்த 2019 தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி வருகிறோம். இதில் பாஜக 26 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிவித்துள்ளோம்.
மீதம் உள்ள 22 தொகுதிகள் சிவசேனா மற்றும் என்சிபி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என கூறியுள்ளோம்.
இது இறுதி முடிவு அல்ல. பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார்.